Friday, 26 August 2011

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம். அறிவிப்பு

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம். அறிவிப்பு

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சி AICUF (சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ) கட்டிடத்தில் நடைபெறுகிறது.

நேரம்  :  காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

கிறித்தவ அருந்ததியர் சமூக சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவண்

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம்
திருச்சி



Tuesday, 23 August 2011

"எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க"

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் தோழர்.திரு.கு.கவிமணி அவர்களின் உரை

எல்லோருக்கும் எல்லாமும் என்ற கருத்தியலின் மையமாக செயல்பட்ட புரட்சியாளர் இயேசுவின் கருத்துருவாக்கத்திற்கு உருகொடுத்து, அவரது 12 சீடர்களுள் ஒருவரான புனித பேதுரு (இராயப்பர்) துவங்கிய திருச்சபையானது, உலகம் முழுமைக்கும் பரவி படர்ந்து, பல்வேறு தளங்களில் இனம், மொழி, நிறம், பிறப்பு அடிப்படையிலான, மேடு பள்ளமான உலகில் அன்பெனும் மண் குவியலை கொண்டு நிரப்பி, சமவெளி சமூகத்தில் ஒன்றுக்கு நூறாக "எல்லோருக்கும் எல்லாமும்" கிடைக்கச் செய்து செயல்பட்டு வருவது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
இந்தியாவிலும் இயேசுவின் கோட்பாடுகளை மூலைமுடுக்கெல்லாம் பரப்பி, ஆலமரமாய் பரவி, கல்வி, மருத்துவம், சமூக மாற்ற பணிகளை மேற்கொள்ளும் திருச்சபையின் செயல்பாடுகளை யாராலும் மறுக்க முடியாது.

இந்திய சமூகம் என்பது சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால், கிறித்தவத்திலும் இன்றைக்கு சாதியத்தின் தலையீடு, நிர்வாகம், சமூகநீதி குறித்த செயல்பாடுகளை வேறு திசைகளில் புரட்டி போட்டுள்ள சூழலில்தான் திருச்சபையின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.



தமிழகத்திலும், திருச்சபை இத்தகைய சூழலில் இயங்கும் தருணத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களின் மேம்பாட்டுக்காக கடந்த 300 ஆண்டுகளாக கிறித்தவத்தின் பணி செம்மையாக செயல்பட்டுள்ளதை கிறித்தவ தலித்துகளின் இன்றைய கல்வி மேம்பாட்டினை வைத்து அறியலாம். தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களில் 90% படித்தவர்கள் யாரெனில் பள்ளர், பறையர் சமூகத்தவர்களாகவே உள்ளனர். கிறித்தவத்தை தழுவிய மேற்கண்ட
சாதியினர் கிறித்தவ வளங்களைப் பயன்படுத்தி தங்களை கல்வி - திருச்சபை பள்ளிகள் மற்றும் இதர பணிக்குழு சார்ந்த அமைப்புக்களின் வேலைவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி உயர்ந்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க இயலாது.


ஆனால் அதே தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களில் ஒரு பகுதியான அருந்ததியர்களோ, இன்றளவும், கல்வியிலும் சரி, திருச்சபை பங்கேற்ப்புகளிலும் சரி 1% - க்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். அருந்ததியர்களின் மீது பெரிய அளவில் பரிதாபம் மட்டுமே இருந்ததே தவிர அவர்களுக்கான உரிமைகளை யாரும் முன்வந்து தந்துதவவில்லை.

ஏன் இந்த சூழல் ஏற்பட்டது? என்ற கேள்விக்கு பதிலாக அருந்ததியர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவெனில், "பிற தாழ்த்தப்பட்ட சகோதர சாதியினர் எங்களை அவர்களோடு சேர்த்துக் கொள்ளாமையே!" என முன்வைக்கின்றனர்.



இந்த சமூகத்தினரின் உணவு, பண்பாடு, நிறம், தொழில் என முழுமையாக பிற சகோதர சாதியினரைவிட மாறுபட்டு காணப்படுவதால் அவர்கள் எங்களை இழிவாக எண்ணிப் பின்னுக்குத் தள்ளினர் என்பதே நிசப்தமான உண்மை என அவர்களின் காரணம் மேலும் வலுப்பெறுகின்றது.
 

இச்சமூகத்திலிருந்து திருச்சபையின் முக்கிய அங்கமான அருட்தந்தையர்கள்,கன்னியர்களாக மிகவும் குறைவாக 2% மட்டுமே உள்ள சூழலில் இவர்களுக்கான உரிமைகள் குறித்து யாரும் பேசவில்லை. அருந்ததியர்கள் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

இங்கே வெட்டியான் தொழில் ஒழிப்பு, பறை அடித்தல் ஒழிப்பு, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு, என ஒரு குறிப்பிட்ட தலித் சமூகத்தினரின் மேம்பாட்டுக்காகவே கிறித்தவ மிஷனரிகள் பணிசெய்தார்களே ஒழிய, செருப்பு தைத்தல் ஒழிப்பு, கையால் மலம் அள்ளும் தொழில் ஒழிப்பு, குறித்து எந்த கிறித்தவ மிஷனரியும் பேசவும் இல்லை, கண்டுகொள்ளவுமில்லை. சமூகத்தில் அழகான அருந்ததியர்களை பொதுச்சமூகம் புறக்கணித்ததுபோல கிறித்தவமும் புறக்கணித்தது.


ஆகவேதான் "உங்கள் ஒளி உங்கள் முன் ஒளிர்வதாக" என்று கூறிய இயேசுவின் வழியில் வெளியே வா....! கிறித்தவத்தில் விடியலைக் காண...! என விடுதலை சங்கை முழங்கி தமிழகத்திலுள்ள கிறித்தவ அருந்ததியர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக மறுத்து வந்த சமூகநீதியை அனைத்து ஆயர்களின் அன்போடு வென்றெடுக்க ஓர் இயக்கமாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இத்தகைய சரியான தருணத்தில் உருவாகியுள்ள இந்த கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தில் ஒட்டு மொத்த கிறித்தவ அருந்ததியர்கள் ஒன்றுசேர்ந்து நமக்கான உரிமைகளை வென்றெடுக்க ஒன்று சேர்வதே சரியானதாகும்.


ஒருங்கிணைவோம்!
ஒருங்கிணைப்போம்!

வென்றிடுவோம்
அருந்ததியர் விடுதலையை.

Friday, 19 August 2011

தமிழக தலித் கிறித்தவர்களைப் பற்றி தமிழக ஆயர்களுக்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உரை

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 17.11.2003 அன்று தமிழக ஆயர்களைச் சந்தித்த போது பின்வருமாறு கூறினார்.

" நீங்கள் (தமிழக ஆயர்கள்) எல்லாக்காலத்திலும் தலித்துகள் எனப்படுகிற தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவதில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து எக்காரணத்தைக்கொண்டும் தலித்துகளை தனியாகப் பிரித்துவிடக்கூடாது. கிறிஸ்த்தவர்களுக்கு இடையிலான உறவைப் பொறுத்தவரை, சாதி அடிப்படையிலான எத்தகைய முன்சார்பு வெளித்தோற்றமும் கூட உண்மையான மானிட கூட்டொருமைக்கு எதிரான அறிகுறி. ஆக்கபூர்வமான அருள்வாழ்வுக்கு அச்சுறுத்தல். திருச்சபையின் நற்செய்திப் பணிக்கு மிக மோசமான தடைக்கல் ஆகும்."

                                                                                         திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
                                                                                                                    17.11.2003